துபாய்: சாம்பியன்ஸ் டிராபி பைனலில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியது.

பாகிஸ்தானில் 9வது ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடந்தன.

ஹென்றி இல்லை

நேற்று நடந்த பைனலில், உலகின் ‘நம்பர்-1’ அணியான இந்தியா, நியூசிலாந்தை (நம்பர்-4) எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து கேப்டன் சான்ட்னர், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். காயம் அடைந்த மாட் ஹென்றிக்கு பதில் நாதன் ஸ்மித் இடம் பெற்றார். இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை.

நல்ல துவக்கம்

நியூசிலாந்து அணிக்கு வில் யங், ரச்சின் ரவிந்திரா வலுவான துவக்க தந்தனர். ஹர்திக் பாண்ட்யா ஓவரில் ரச்சின் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 16 ரன் கிடைத்தன. ஷமி ஓவரிலும் ரச்சின் 2 பவுண்டரி அடித்தார். நியூசிலாந்து 7 ஓவரில் 51/0 ரன் எடுத்தது.

வருண் திருப்பம்

போட்டியின் 8வது ஓவரில் வருண் சக்ரவர்த்தி திருப்பம் ஏற்படுத்தினார். இவரது சுழலில் வில் யங் (15) அவுட்டானார். இதற்கு பின் இந்திய ‘ஸ்பின்னர்’கள் பிடியை இறுக்கினர். குல்தீப் பந்தில் ‘ஆபத்தான’ ரச்சின் (37) போல்டானார். அனுபவ வில்லியம்சன் (11) குல்தீப் பந்தை அவசரப்பட்டு அடித்து அவரிடமே ‘கேட்ச்’ கொடுத்து வெளியேற, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். நியூசிலாந்து 12.2 ஓவரில் 75/3 ரன் எடுத்து தவித்தது. நமது நான்கு ‘ஸ்பின்னர்’கள் தொடர்ந்து துல்லியமாக பந்துவீச, அடுத்த 81 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை.

பிரேஸ்வெல் விளாசல்

லதாம் (14) நிலைக்கவில்லை. மீண்டும் பந்துவீச வந்த வருண், இம்முறை பிலிப்சை (34) போல்டாக்கினார். போராடிய மிட்சல், 91 பந்தில் தனது மந்தமான அரைசதத்தை எட்டினார். கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் அதிரடியாக ஆடினார். ஷமி பந்தில் இமாலய சிக்சர் (89 மீ., துாரம்) விளாசினார். மிட்சல் 63 ரன்னில் (101 பந்து, 3×4) அவுட்டானார். பிரேஸ்வெல், 39 பந்தில் அரைசதம் எட்டினார். கடைசி 10 ஓவரில் 79 ரன் எடுக்கப்பட்டன. நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 251 ரன் எடுத்தது. பிரேஸ்வெல் (53, 3×4, 2×6) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் வருண், குல்தீப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ரோகித் அரைசதம்

சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா ‘சூறாவளி’ துவக்கம் தந்தார். அதிரடி ‘மூடில்’ இருந்த இவர், நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தார். மறுபக்கம் சுப்மன் அடக்கி வாசித்தார். நாதன் ஸ்மித் ஓவரில் ‘ஹிட்மேன்’ ரோகித் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடிக்க, 14 ரன் கிடைத்தன. கேப்டன் இன்னிங்ஸ் விளையாடிய இவர், 41 பந்தில் அரைசதம் எட்டினார். 17 ஓவரில் இந்தியா 100/0 ரன்னை தொட்டது. முதல் விக்கெட்டுக்கு 105 ரன் சேர்த்த நிலையில், சான்ட்னர் பந்தில் கிளன் பிலிப்ஸ் வழக்கம் போல பறந்து ஒரே கையால் பிடித்த ‘கேட்ச்சில்’ சுப்மன் (31) வெளியேறினார்.

கோலி ஏமாற்றம்

அடுத்து வந்த கோலி (1), பிரேஸ்வெல் பந்தில் எல்.பி.டபிள்யு., ஆக, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு ‘ரிவியு’ கேட்டும் பலன் கிடைக்கவில்லை. சிறிது நேரத்தில் ரோகித் (76, 7×4, 3×6) அவுட்டாக, பதட்டம் ஏற்பட்டது. இந்தியா 27 ஓவரில் 122/3 ரன் எடுத்திருந்தது.

ராகுல் உறுதி

பின் ஸ்ரேயாஸ், அக்சர் பொறுப்பாக ஆடினர். பிலிப்ஸ் ஓவரில் ஸ்ரேயாஸ் அடித்த பந்து ‘லாங்-ஆன்’ திசையில் நின்ற ஜேமிசன் கைக்கு நேராக வந்தது. ஆனால், அவர் ‘கேட்ச்சை’ நழுவவிட்டு, இந்தியாவுக்கு உதவினார். நியூசிலாந்தின் கோப்பை கனவை தகர்த்தார். சான்ட்னர் பந்தில் ரச்சினின் சூப்பர் ‘கேட்ச்சில்’ ஸ்ரேயாஸ் (48) அவுட்டானார். அக்சர் படேல் (29), ஹர்திக் பாண்ட்யா (18) கைகொடுத்தனர்.

 

கடைசி வரை நிலைத்து நின்று ஆடிய லோகேஷ் ராகுல், அணியை கரை சேர்த்தார். ரூர்கே பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரவிந்திர ஜடேஜா, வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 254 ரன் எடுத்து வெற்றி பெற்று, சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது. ராகுல் (34), ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன்மூலம், 3வது முறையாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி அண்மையில் டி20 உலகக்கோப்பையை வென்றிருந்தது. தற்போது, சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது.

ஆட்ட நாயகன் விருது

இந்த போட்டியில் 76 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

தொடர் நாயகன்

தொடர் நாயகன் விருது, நியூசிலாந்து அணியின் ரச்சின் ரவீந்திராவிற்கு வழங்கப்பட்டது.