சென்னை : திருப்பூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லுாரியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, ஊதியம் வழங்க பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாமல், மேல்முறையீடு வழக்கு தொடர்ந்த தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து, 50 லட்சம் ரூபாய் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், அரசு உதவி பெறும் ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லுாரி செயல்படுகிறது. இங்கு நியமிக்கப்பட்ட, 12 ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் ஊதியம் வழங்க உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, உயர் கல்வித்துறை செயலர், கல்லுாரி கல்வி இயக்குநர், கல்லுாரி கல்வி கோவை மண்டல இணை இயக்குநர் ஆகியோர் சார்பில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, 1987ம் ஆண்டு நிபந்தனை அடிப்படையில், நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்தது குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க, அப்போதைய கல்லுாரி கல்வி இயக்குநர் பூர்ண சந்திரனுக்கும், விசாலாட்சி மகளிர் கல்லுாரிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் பணியிடங்கள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, நீதிமன்றத்தில் அப்போதைய கல்லுாரி கல்வி இயக்குநர் பூர்ண சந்திரன் ஆஜரானார். அப்போது அவரிடம் நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், துாண் போல் நின்று கொண்டிருந்த செயல் துரதிருஷ்டவசமானது. அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர் பணியிடங்கள் குறித்த ஆவணங்கள் இல்லை என தெரிவித்தது வாயிலாக, நீதிமன்றத்தில் உண்மை வெளிவர விடாமல் கல்லுாரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தடுத்து விட்டனர்.

தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை, 50 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறோம். இந்த தொகையில் இருந்து, ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கு, தலா 1.50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மீதமுள்ள 32 லட்சம் ரூபாயை, கேன்கேர் பவுண்டேஷன், நேத்ரோதயா அமைப்புகளுக்கு தலா, 16 லட்சம் ரூபாய் வீதம் எட்டு வாரங்களில் வழங்க வேண்டும்.

கல்லுாரி கல்வி இயக்குநரக அதிகாரிகளின் ஒத்துழைப்பின்மை, பிடிவாதம், உண்மையை நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் மறைத்ததற்காக, இந்த அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில், 25 லட்சம் ரூபாயை, கல்லுாரி கல்வி இயக்குநர் பூரண சந்திரனிடம் வசூலிக்க வேண்டும். மீதமுள்ள, 25 லட்சம் ரூபாயை, ஆவணங்கள் காணாமல் போனதற்கு காரணமான அதிகாரிகளிடம் அரசு வசூலிக்க வேண்டும்.

ஆசிரியர் அல்லாத 12 ஊழியர்களுக்கும், எட்டு வாரங்களில் ஊதியம் வழங்க வேண்டும். கல்லுாரி கல்வி இயக்குநரகத்தில் உள்ள ஆவணங்கள் மாயமானதற்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக, உயர் கல்வித்துறை செயலர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.