சென்னை: சுதந்திர தின விழா உரையின் போது, பிரதமர் மோடி அறிவித்த ‘விஸ்வகர்மா’ திட்டம், இம்மாதம் துவக்கபப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, பல்வேறு வகையில் நிதியுதவி மற்றும் கடனுதவி வழங்கப்பட உள்ளது.

இதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இத்திட்டம் நடப்பாண்டு முதல் ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும்.

இத்திட்டத்தின் கீழ், தச்சர், பொற்கொல்லர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், காலணி தைப்பவர், காலணி தைப்பவர், காலணி செய்பவர், கொத்தனார், கயிறு செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர்,சலவைத் தொழிலாளர், டெய்லர் உட்பட, 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன் பெறலாம்.

நாளை மறுதினம் இத்திட்டத்தை, பிரதமர் துவக்கி வைக்க உள்ளார். 

இத்திட்டத்திற்கு தி.மு.க., மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

அதைத் தொடர்ந்து, விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், பயன், அதன் வழிகாட்டி விதிமுறைகள் போன்றவை குறித்து ஆய்வு செய்து, இத்திட்டம் சமூக, பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிக்கை அளிப்பதற்காக, தமிழக அரசு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் குழு அமைத்துள்ளது.

குழுவில், தி.மு.க., – எம்.எல்.ஏ., எழிலன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலர் ரீட்டா ஹரீஸ் தாக்கர் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழு ஒருங்கிணைப்பாளராக தொழில் துறை செயலர் அருண்ராய் செயல்படுவார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.