குரூப்-4 பணி: 21-ஆம் தேதி முதல் 2ம் கட்ட கலந்தாய்வு – டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு

 

குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 21-ஆம் தேதி தொடங்கும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, “ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (குரூப்- 4)இல் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர் / இளநிலை உதவியாளர்/ கள உதவியாளர் / வரித் தண்டகர் / பண்டகக் காப்பாளர் போன்ற பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வானது, கடந்த 20.07.2023 முதல் 10.082023 வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது.

மேற்கூறிய கலந்தாய்வில் 5354 இளநிலை உதவியாளர்/ வரித் தண்டலர் / கன உதவியாளர் பணியிடங்களும் மற்றும் 425 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், மீதமுள்ள 47 காலிப்பணியிடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தகுதி வாய்ந்த தேர்வர்களைக் கொண்டு நிரப்பப்படும்.

மேலும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் – தேர்வு IV (குரூப் – IV)இல் அடங்கிய 3373 தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 21.08.2023 முதல் 11.09.2023 வரை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 1079 சுருக்கெழுத்துத் தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு  20.09.2023 முதல் 26.092023 வரை நடைபெறும்.

 
தேர்வாணைய அலுவலகத்தில் போதிய இடவசதி இன்மையால் மேற்கண்ட நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்கள் தங்களுடன் இளம் சிறார்கள்,  பெண்கள் மற்றும் முதியோர் ஆகியோர்களை உடன் அழைத்து வருவதினை தவிர்த்து தேர்வாணைய அலுவலகத்தின் எதிரே ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க தேர்வாணையத்திற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு” அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.